இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஊடாக வெளியுறவுத்துறை அமைச்சர் டினேஸ் குணவர்த்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்ததாகத் தெரிவித்து கடந்த மார்ச் 10ஆம் திகதி மன்னார் பேசாலையைச் சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட, ரவீந்திரன் அருண் குரூஸ் மற்றும் வெலிசோர் றேகன் பாய்வா ஆகிய இருவரும் தமிழக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த மீனவர்கள் இருவரும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்தியக் கடல் எல்லைக்குள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என உறவினர்கள் கோரியுள்ளனர்.