அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளத் தயார்- கபீர் ஹஷீம் ; அவ்வாறு செய்வது நல்லதல்ல – ரிஷாட் பதியுதீன்

அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.ஊடக சந்திப்பு ஒன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்,எமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம்,

நாம் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டோம். அதேபோன்று எனது மாவட்ட மக்களும் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆகவே கட்சியும், அரசும் குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாயின் மீண்டும் பதவியைப் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.எனது மாவட்ட மக்களின் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்து மீண்டும் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராகவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்,

எமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில், மீண்டும் பதவியேற்குமாறு பல தரப்பினரிடமிருந்தும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கப்படும் நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
“நாங்கள் பதவி விலகும்போது அரசாங்கத்துக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவிலலை. குறிப்பாக எம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு மாதகாலத்துக்குள் தீர்வு பெற்றுத்தரவேண்டும்.

அத்துடன், குருணாகல், மினுவங்கொடை பிரதேசங்களில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதுடன் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என தெரிவித்திருந்தோம்.

அதேபோன்று இனவாத தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என கைதுசெய்யப்பட்ட 450க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறு சிறு காரணங்களுக்காக முஸ்லிம் மக்கள் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்க முடியாதவகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.

வெறுப்பூட்டும் வகையில் பேசுவதற்கு எதிராக சட்டம் நிலைநாட்ட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம். இவை எதுவும் இன்னும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.