அமெரிக்காவில் 80 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று!

அமெரிக்காவில் 80 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ்  தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே நேரம் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.91 கோடியைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 22 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 53.10 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் யானிங் ஜூ உள்ளிட்டவர்கள் கொரோனா பரவல் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘நானோ லெட்டர்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதுபற்றி பேராசிரியர் யானிங் ஜூ மற்றும் லீ ஜாவோ ஆகியோர் கூறியதாவது:-

பெரும்பாலான சூழ்நிலைகளில், நோய் கட்டுப்பாட்டு மையம் பரிந்துரைத்துள்ள 6 அடி தனி மனித இடைவெளி என்ற தொலைவுக்கு அப்பாலும் சுவாச நீர்த்துளிகள் பயணிப்பதை நாங்கள் கண்டறிந்து இருக்கிறோம்.

குளிரான சூழலில், சுவாச நீர்த்துளிகள், தரையில் விழுவதற்கு முன்பாக 6 மீட்டருக்கு (19.7 அடி) அப்பாலும் பயணிக்கின்றன. ஏற்கனவே இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவுவதாக வந்த புகார்களுக்கு இது விளக்கமாக இருக்கலாம். குளிர்காலத்தில் சுவாச துளிகள் மூலம் கொரோனா அதிகமாக பரவலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உலக நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விடும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்துக்குள் 3-வது தடுப்பூசியை ரஷியாவால் விரைவில் பதிவு செய்ய முடியும் என அந்த நாட்டு தேசிய பொது சுகாதார மேற்பார்வை அமைப்பு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.