அமெரிக்காவின் புதிய வரி : வொஷிங்டன் செல்லும் இலங்கை குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரி குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பிரதிநிதிகள் குழு நாளை மறுதினம் (22) வொஷிங்டனுக்கு செல்ல உள்ளதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடனான பேச்சுக்களின் போது வரிகளைக் குறைத்தல் மற்றும் இறக்குமதியை அதிகரித்தல் போன்ற விடயங்கள் குறித்து இந்த குழு கலந்துரையாடவுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் எமிலி ஆஷ்பி மற்றும் உதவி பணிப்பாளர் பிரெண்டன் லிஞ்ச் ஆகியோருடன் இலங்கை பிரதிநிதிகள் கடந்த வாரம் மெய்நிகர் ஊடாக கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

இதில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் அடிப்படையிலேயே இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர்.
அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, அமெரிக்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான பரிந்துரைகளைத் தயாரிப்பது மற்றும் ஏற்றுமதி இலக்குகளை பல்வகைப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அமெரிக்காவிற்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 44 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் ஆரம்பத்தில் விதித்திருந்தார்.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பினால் இலங்கையின் ஆடைக் கைத்தொழில் துறையானது பாரிய தாக்கத்தை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.