அதிகரிக்கும் கொரோனா – மிகப்பெரிய பரிசோதனைக்கு நடவடிக்கை முன்னெடுப்பு

வியட்நாமில் புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதால், அதை சமாளிக்கும் விதமாக மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் இதுவரை 7,000க்கும் அதிகமான பாதிப்புகளும் 47 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அதில் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகள், புதிய வகை திரிபுவால் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஹோ ச்சீ மின் நகரின் மையப்பகுதியில் கிறிஸ்துவ மிஷன் இயங்கி வருகிறது. அங்கு மட்டும் 125க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால், அந்த இடத்தை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறது வியட்நாம் அரசு.

இதன் தொடர்ச்சியாக தினமும் ஒரு இலட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதிக பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கும் நோக்குடன் இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது தவிர மே 31 முதல் 15 நாட்களுக்கு வியட்நாமில் புதிய சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அதன்படி கடைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவை தற்காலிகமாக மூடப்படும். பொது இடங்களில் 10 பேர் கூட விதிக்கப்பட்ட தடை, ஐந்து பேராக கட்டுப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அங்கு வார இறுதியில் மிகவும் ஆபத்தான ஹைபிரிட் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த புதிய திரிபு, இந்தியா மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட வைரஸ் அம்சங்களின் கலவையாக உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.