யாழ் பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடிய மாணவர்கள் சிலரை இராணுவத்தினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதால் குறித்த இடத்தில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,
இன்று காலை மாணவர் ஒருவருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு 5 மாணவர்கள் பல்கலை முன்றலில் ஒன்று கூடியுள்ளனர். அப்போது அங்கு வந்த இரு காவல்துறை உறுப்பினர்கள் இந்த இடத்தில் நிற்க வேண்டாம் என கூறி மாணவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.
அப்போ அங்கு வந்த இராணுவத்தினர் துப்பாக்கியை மாணவர்களை நோக்கி நீட்டி “நீங்கள் புலிகள் இங்கு எந்த நிகழ்வும் கொண்டாட முடியாது“ என தெரிவித்ததுடன் அவர்களை அச்சுறுத்தியும் உள்ளனர். இதையடுத்து மாணவர்கள் அங்கு ஒன்றுகூடியதை தொடர்ந்து அப் பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
மேலும் பல்கலைக்கழக பகுதியில் இருந்து காவல்துறை மற்றும் இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என மாணவர்கள் தெரிவித்த நிலையில், மாணவர்களை உள்ளே செல்லுமாறு காவல்துறையினர் மிரட்டும் தொணியில் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வழமையாக தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை நீதிமன்ற தடை உத்தரவை மதித்து நாம் அந்த நினைவு நாளை நினைவு கூரவில்லை என்றும் ஆனால் எம் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி எம்மை விரக்தியடைய வைப்பது கண்டிக்கத்தக்கது எஎனவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.