11ஆண்டுகளாக   தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி

இலங்கையை சேர்ந்த அகதி ஒருவர், அவுஸ்திரேலிய குடியேற்றவாசிகளுக்கான முகாமில் 11 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என கார்டியன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பெரும்பான்மையினத்தை சேர்ந்த அந்த  நபருக்கு  இழைக்கப்பட்ட அநீதி குறித்து கார்டியன் இணையத்தளம்  வெளியிட்டுள்ள செய்தியில்,

இலங்கையை சேர்ந்த குறித்த அகதி, அவுஸ்திரேலிய அரசாங்கம் தனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்த போதிலும் 11 வருடங்களாக குடியேற்றவாசிகளுக்கான முகாமில் தடுத்து வைத்துள்ளது. அந்த அகதி மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை.

எனினும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு முறையினால் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், கடந்த பத்து வருடங்களாக தனது குடும்பத்தவர்களை சந்திக்கவில்லை பத்து வயது மகனை பார்க்கவில்லை.

பத்து வருடங்களுக்கு பின்னர் நான் சுதந்திரமாக வாழ விரும்புகின்றேன் என அவர் தடுப்பிலிருந்து தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார்.

2010 இல் இலங்கையிலிருந்து தப்பி அவுஸ்திரேலியா சென்ற அகதியின்   நிலைமையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் மிகவும் அவசரமான நிலை என வர்ணித்திருந்தது.

சிங்கள கத்தோலிக்க சமூகத்தினை சேர்ந்த  அவர், எதிர்கட்சிகளுடன் அவருக்கு இருந்த தொடர்பினால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். அவரது வர்த்தக சகாவை படையினர் கடத்தினார்கள் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இலங்கையில் வன்முறைகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து அவரும் வேறு 31 பேரும் தங்களிடமிருந்த பணத்தை பயன்படுத்தி சிறிய மீன்பிடிபடகினை வாங்கி 2009 மார்ச் மாதம் 31 ம் திகதி இலங்கையின் சிறிய துறைமுகமொன்றிலிருந்து அவுஸ்திரேலியா புறப்பட்டனர்.

ஏப்பிரல் 22 ம் திகதி அவர்கள் அவுஸ்திரேலியா வந்து சேர்ந்தனர். எனினும் அவுஸ்திரேலிய கடற்படையினர் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவுகளுக்கு அருகில் அவர்களை தடுத்து நிறுத்தி முகாமுக்கு அனுப்பியுள்ளனர்.

படகுப்பயணத்தை ஏற்பாடு செய்தவர் என்ற அடிப்படையில் குறித்த அகதிக்கு  2010 இல் ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்ப்பட்டது.

எனினும் அவர் மேல்முறையீடு செய்ததைதொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றம்  இந்த வழக்கை மிகவும் அவசரமான நிலையிலேயே படகுப்பயணத்தை ஏற்பாடு செய்தார் என தெரிவித்து அவருக்கு எதிரான தண்டனையை இரத்துச்செய்தது.

அதன் பின்னர் அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், குறித்த அகதிக்கு எதிரான தீர்ப்பு இரத்துச்செய்யப்பட்ட போதிலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும் அவுஸ்திரேலிய அரசாங்கம்  விடுதலை செய்யவில்லை, அவர் தொடர்ந்தும் குடிவரவு தடுப்புமுகாமிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரை பல தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்துள்ளனர், இரண்டு தடவை கிறிஸ்மஸ்தீவுக்கு அனுப்பியுள்ளனர், அவர் தன்னை அதிகாரிகள் திருப்பியனுப்பலாம் என அச்சம் கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டால் அவரது கையடக்க தொலைபேசி பறிமுதல்செய்யப்படலாம் என கார்டியன் செய்தி இணையம் மேலும் தெரிவித்துள்ளது.