முழங்காலில் நிற்க வைத்து தாக்கிய சிறிலங்கா கடற்படை;கொதித் தெழுந்த மன்னார் மக்கள்

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து இன்று காலை மீன் பிடிக்க கடலுக்குச்சென்ற மீனவர்கள் சிலர் மீது கடலில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீனவர்கள் மீது கடலில் வைத்து கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டமையினால் சிறிது நேரம் மன்னார் பாலத்தடி கடற்கரையில் மீனவர்கள் ஒன்று திரண்டு தமது கண்டனத்தை தெரிவித்தனர். இதன் காரணமாக கடற்கரைப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை காவலரனில் இன்று காலை மீனவர்கள் தொழிலுக்குச் செல்லும் தமது ஆவணங்களை சமர்பித்து உரிய அனுமதியுடன் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தொழிலுக்குச் சென்ற படகு ஒன்றை கடலில் வைத்து இடை மறித்த சிவில் உடையில் இருந்த கடற்படையினர் ஆவணத்தை பரிசீலினை செய்ய ஆவணங்களை கோரியுள்ளனர். இருப்பினும் ஆவணங்களை வழங்குவதற்கு முன்னரே கடற்படையினர் படகில் இருந்த மீனவர்கள் மீது கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் தாக்குதல்களுக்கு உள்ளான மீனவர்கள் சக மீனவர்களுக்கு தகவல் வழங்கியதோடு, கடற்கரைக்கு திரும்பினர். பின்னர் கடும் காயங்களுக்கு உள்ளான மீனவர் ஒருவர் உடனடியாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மீனவர்கள் கடற்கரையில் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்சியாக மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மன்னார் பிரதான பாலத்தில் இருந்து மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பகுதி வரை சுமார் மூன்று இடங்களில் தாங்கள் முழுமையாக சோதனைக்கு உற்படுத்தப்படுவதாகவும் இதனால் தங்களால் உரிய நேரத்தில் மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இன்றைய தினம் வழமை போல் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் தங்களை முழங்காலில் நிற்கவைத்து தடிகளால் அடித்ததாகவும் துவக்கினால் சுடுவதாக அச்சுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் மீனவர்கள் கடற்படையினரினால் தாக்கப்பட்டமை தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களால் முறைப்படும் மேற்கொள்ளப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.