எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்-பொலீஸார் குவிப்பு

இந்திய திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பின் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக நேற்று மாலை 6.30 மணிக்கு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்மோ கருவிகள், சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது உறவினர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனை பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனைக்குச் சென்று எஸ்.பி.பியின் குடும்பத்தினரை நடிகர் கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் சந்தித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், எஸ்.பி.பி நலமுடன் இருக்கிறார் என சொல்ல முடியாது, மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார் என்று மட்டுமே கூற முடியும் என்று தெரிவித்துள்ளனர்.  மேலும் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.