காஷ்மீர் தொடர்பாக சீனா,பாகிஸ்தான் படைத்தளபதிகள் பேச்சு

காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து சீன ராணுவ ஆணைய துணைத் தலைவருடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆலோசனை நடத்தியுள்ளார்.

சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் சூ கிலியாங் தலைமையிலான உயர்மட்டக் குழு, பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சீன குழு நேற்று பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்கு சென்றதுடன், அங்கு சூ கிலியாங்கும், பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுகள், பிராந்திய பாதுகாப்பு, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் காஷ்மீரின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட தருணத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, சீனாவுக்கு சென்று இந்த விவகாரம் குறித்து முக்கிய தலைவர்களுடன் விவாதித்தார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கப்பட்ட போது பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்தது. ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிலிருந்து விலக்கிக் கொண்டன.அது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான விவகாரம் எனவும், அதில் மற்ற நாடுகள் தலையிட கூடாது என அந்த நாடுகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.