4.61 இலட்சம் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது நிர்மலா சீதாராமன்

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் பழைய நடைமுறைகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 1964 முதல் 2008 வரை 4.61 இலட்சம் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதென இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டத்தில் நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் நிராகரிக்கும் சட்டமல்ல. புதிய குடியுரிமையை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கவே திருத்தம் கொண்டு வரப்பட்டது. என்.ஆர்.சி, என்.பி.ஆருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் சம்பந்தமில்லை.

இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 1964 முதல் 2008 வரை 4.61 இலட்சம் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் முகாமைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. சி.ஏ.ஏ பற்றி பேசுவோர் அகதிகள் முகாம் பற்றி பேசுவதில்லை. மனித உரிமையைப் பற்றி பேசாதவர்கள்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேசுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.