13 ஆவது திருத்தத்தில் தமிழருக்கு சமத்துவம் கிடைக்காது: சம்பந்தனுக்கு கஜேந்திரன் பதில்

பெளத்த சிங்கள பேரினவாதத்தால் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றமைக்கு, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வினால் முற்றுப்புள்ளிவைக்க முடியாது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரையில், தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றமையை ஏற்க முடியாது. தமிழர்கள் சமத்துவமாக வாழக்கூடிய அரசியல் தீர்வு வேண்டுமென கூறியிருந்தார். அவர் கூறியுள்ள அனைத்து விடயங்களும் 13ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தன.

பெளத்த சிங்கள பேரினவாதத்தால் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றமைக்கு முற்றுப்புள்ளி வைக்க எங்களைப் பொறுத்தவரை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவொரு தீர்வினாலும் முடியாது” என்றார்.