வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை செம்மணியில் புதைப்பதற்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் செம்மணி சிந்துபாத்தி இந்து மயாணத்திற்குள் புதைக்கும் செயற்பாடு பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது.

போதனா வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட மருந்துக்களின் கழிவுகள் , வெற்றுப் போத்தல்கள் , என பெரும் தொகையானவை 4 டிப்பர் வண்டிகளில் 3 தினங்களிற்கு முன்னர் ஏற்றிச் செல்லப்பட்டு குறித்த மயாணத்தில் ஜே.சி.பி்இயந்திரம் மூலம் பாரிய குழி தோண்டப்பட்டு அக் குழியிலே கழிவுகளை கொட்டப்பட்டுள்ளன

இவ்வாறு கொட்டிய கழிவுகளை நல்லூர்ப் பிரதேச சபையினர் அவதானித்து போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதனை பகிரங்கப்படுத்த வேண்டாம் அவ்வாறு பகிரங்கப்படுத்தி மலையுடன் மோதவேண்டாம் என அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு குழியில் கொண்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை மூடுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் நால்வர் மயானத்தில் நின்ற சமயம் பிரதேச்சபை உறுப்பினர்கள் அவர்களை பிடித்து விசாரித்த போது, இந்த கழிவுகளை மூடுமாறு வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டோம் எனக் கூறியுள்ளனர்.

தமது சபையின் ஆளுகைக்குட்பட்ட விவசாய நிலத்தை அண்டியுள்ள மயாணத்தில் இவ்வாறு சுகாதாரத்திற்கு ஆபத்தான மருத்துவக் கழிவுகளை பொறுப்பற்ற விதத்தில் திருட்டுத்தனமாக கொட்டி ஊருக்கும் மாவட்டத்திற்கும் பெரும் அழிவிற்கு காரணமாக செயல்படும் இச் செயல்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாக நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகமூர்த்தி தெரிவித்தார்.

இதேநேரம் குறித்த விடயத்தை கண்டித்து நல்லூர்ப் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் இந்த மயானத்தின் முன்பாக ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் இடம்பெற்ற சமயம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிசார் சம்ப இடத்திற்கு வந்து வீதி தடையை விலக்கி போக்குவரத்துக்கு ஒத்துழைத்ததோடு இவ் விடயம் தொடர்பில் உரிய தீர்வை எட்டுமாறும் கூறினார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில. விதிமுறையை மீறிய வகையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய்க் கழிவுகளும் அதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் இரகசியமாக எரியூட்டப்பட்டமை , பண்ணைப் பகுதியில் உள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் அதிகளவான மருந்துகள் குடியிருப்பின் மத்தியில் இரகசியமாக தீ இட்டு எரித்தமை போன்ற சம்பவங்கள் வெளிவந்தமை போன்று தற்போது 3வது சம்பவமும் வெளிவந்துள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் தெரிவித்தார்.