வைகோ, ராமதாஸ், திருமா, நெடுமாறன் ஆகியோர் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் -நாமல்

தமிழக அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்றும், வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஆகியோர் இலங்கைத் தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகனும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில், ராஜபக்ஸவின் சகோதரர் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி பதவியேற்பின் போது, தமிழ் மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதேவேளை, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கோத்தபயா தேர்வானது குறித்து அதிருப்தி தெரிவித்ததுடன், பிரதமர் மோடி தலையிட்டு தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை தமிழ் மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மகிந்த ராஜபக்ஸவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்யவில்லை. தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக் காயாக பயன்படுத்துவதுதான் மிகுந்த வேதனை தரும் உண்மை.

எமது கட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபயா ராஜபக்ஸ, இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு இந்தியப் பிரதமர் உட்பட பல நாடுகளின் அரச தலைவர்கள் வாழ்த்துக்களை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் தங்களது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை தமிழ் மக்கள் பற்றி அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலைக் கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கையை நான் கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறெதுவும் இல்லை. எமது மக்களை பகடைக் காய்களாக்கியும், எம் மக்களிடையே பகையையும், இனத்துவேசத்தையும் தூண்டி விடும் மூன்றாம்தர அரசியல் தவிர வேறு என்ன ஆக்கபூர்வமான விடயத்தை செய்திருக்கின்றார்கள் என்ற கேள்வி என்னுள் எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து, வடக்கு-கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் சினேகபூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தது உலகம் அறிந்த விடயம்.

அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தவைரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டதுடன், எம்முடன் சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டு, எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டிருந்தார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது.

எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெள்ளிப்படையான தன்மையுடனும், நல்லெண்ணத்துடனும் செயற்படும்.

தமிழக அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டுவிட்டு நடைமுறை அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றிச் சிந்திப்பது சாலச் சிறந்தது.

ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தால், எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்தவரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழக அரசியல் தலைவர்களை அன்புடனும், மரியாதையுடனும் கேட்டுக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.