வெளிநாட்டவரை கொரோனா பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் அதிரடி நடவடிக்கை

வவுனியா- இரேசேந்திரகுளம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்து, உறவினர் வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தை, கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்திய பரிசோதனைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘வவுனியா- இராசேந்திரகுளத்திலுள்ள வீடொன்றில்,  வெளிநாட்டிலிருந்து  வருகை தந்தவர்கள் தங்கியிருப்பதாக, பொலிஸாருக்கு பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த இடத்திற்கு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் சென்ற வவுனியா பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த  விசாரணையின் பின்னர், அந்த குடும்பத்தினருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருந்தனர்.

பெல்ஜியத்தில் இருந்து நேற்றையதினம் இலங்கை வருகைதந்த கணவனும் கடந்தமாத இறுதியில் வருகை தந்திருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுமே கொரோனோ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.