விமான நிலைய வருகை தரும் பகுதி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை தரும் பகுதியை மூடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிச் செல்லும் பகுதி திறந்திருக்கும் என்பதுடன், இலங்கைக்கு வெளியே பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இடைநிறுத்தும் பயணிகள் செயற்பாடும்(Passenger transit) செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் பயணிகள் வருகை தருவதைத் தவிர்ப்பதற்கு துறைமுக அதிகார சபை பின்பற்றும் நடைமுறைகள் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். கொரோனா வைரஸ் தாக்கத்தின் நிலை நாட்டில் சீராகும் வரை இந்த தீர்மானங்கள் நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.