விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாக 4 நாட்கள் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைச்சட்டம் தொடர்பான விசாரணைக்காக ஆணையர் சங்கீதா பின்ரா செகல் தலைமையிலான குழுவினர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று (18) காலை மதுரை வந்தடைந்தனர்.

மதுரை பயணியர் விடுதியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி வரை 4 நாட்கள் விசாரணை நடைபெறுகின்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்தது. பயங்கரவாத தடுப்புச் சட்த்தின் கீழ், இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்த விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை ஏன் நீக்க வேண்டும் என்பது தொடர்பாக தங்களின் கருத்துக்களை விசாரணைக் குழுவினரிடம் பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைச் சட்டம் தொடர்பான விசாரணைக்காக, விசாரணை ஆணையர் சங்கீதா பின்ரா செகல் தலைமையிலான குழுவினர் மதுரை வந்தடைந்துள்ளனர்.

அவர்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் மதுரையில் முகாமிட்டிருக்கும் 4 நாட்களில் முக்கிய பிரமுகர்கள் விசாரணைக்காக ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வைகோ இன்று பிற்பகல் 3 மணியளவில் விசாரணைக்காக ஆஜராகின்றார்.

தொடர்ந்து இந்த விசாரணைக் குழுவானது மதுரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலும் விசாரணைகளை மேற்கொள்ளும் எனத் தெரிகின்றது.