‘விடுதலைப் புலிகள் தொடர்பான எந்த வார்த்தையையும் நான் பிரயோகிக்கவில்லை’ முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தன்னால் வெளிப்படுத்தப்பட்ட கருத்து திரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இவ்வாறான முரண்பாடுகள் தொடர்வதற்கு சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் ஊடகங்களில் வெளியாகின்ற சில செய்திகளுமே காரணமாக அமைவதாகவும் முரளிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்துத் தெரிவித்த முரளிதரன், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்த நாள் தனக்கு மகிழ்ச்சியான தினம் எனத் தெரிவித்திருந்தமை தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன.

குறித்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும்போதே முத்தையா முரளிதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“2009 – 2019 இற்கு இடைப்பட்ட யுத்தம் அற்ற சூழல் தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 2019 இல் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. எனவே என்னுடைய வாக்கு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒருவருக்கே வழங்கப்படும் என்பதையே தெரிவித்திருந்தேன்.

யுத்தம் மகிழ்ச்சியான விடயம் அல்ல என்பதைதான் தெரிவித்திருந்தேன். ஆனால், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை தொடர்பான எந்த வார்த்தையையும் பிரயோகிக்கவில்லை.

இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டிருந்தேன். சிறுபான்மை கட்சிகள் தொடர்பான கேள்விக்கு, கட்சி ரீதியான – மத ரீதியான அரசியல் கட்சிகளின் செய்ற்பாடுகள் நாட்டில் பிரிவினைகளை ஏற்படுத்துகின்றது என்ற வகையில் அவை அகற்றப்பட வேண்டும் என்ற விடயத்தையும் கூறியிருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக வெளிப்படையாக யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று முரளிதரன் தெரிவிக்கின்றபோதிலும் கோட்டபாய ராஜபக்ஷ ஆதரவு கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றி, யுத்ததை முடிவுக்கு கொண்டு வரப்பபட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவித்திருப்பதன் மூலம் முரளிதரனின் எதிர்பார்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.