விக்னேஸ்வரன் ஒரு மாய மான்; சாடுகின்றார் கஜேந்திரன்

விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மக்கள், கொள்கையில் உறுதியாக இருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு பின்னால் வராமல் தனக்குப் பின்னால் வரவைக்கின்ற ஒரு ஏமாற்று நாடகத்தை அவர் முன்னெடுத்து வருகிறார் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு – கோப்பாவெளியில் அமைக்கப்பட்டுள்ள குடிதண்ணீர்த் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“விக்னேஸ்வரனை நாங்கள் ஆரம்பத்தில் முழுமையாக நம்பினோம். அவரை வைத்துத் தான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.2014ஆம் ஆண்டு அரசலமைப்பினை உருவாக்கவிருந்த காலத்தில் ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கும் சமஷ்டியை உருவாக்குவதற்கான அழுத்தத்தை வழங்கும் வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படை யில் ஓரு தீர்வுத் திட்டமும் எழுதப்பட்டது.

ஆனால் இந்த விக்னேஸ்வரனோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகச் செயற்படுபவர் எனத் தன்னை காட்டிக்கொண்டு தமிழ் மக்களின் அபிலாஷை மீது பற்று கொண்டவர் எனக் காட்டிக்கொண்டு, தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத் திட்டத்தில் தமிழ்த் தேசம், இறைமை என்பதை உள்ளடக்குவ தற்கு அவர் மறுத்துவிட்டார்.

தமிழ் மக்கள் பேரவை ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு பேரெழுச்சியை விக்னேஸ்வரன் நாசமாக்கினார் – குழப்பியடித்தார். இன்று விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கின்றார். கூட்டமைப்பு தென்னிலங்கைக்கு விலை போய்விட்டதாகக் கூறுன்றார். ஆனால் இவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது. விக்னேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்படுவது போன்று ஒரு நாடகமாடுகின்றார்” என்றார்.