வடக்கு மாகாண மக்களுக்கான அறிவித்தல்

வடக்கு மாகாண மக்களுக்கு சுகாதாரத் துறையினரால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “இதுவரை வடக்கு மாகாணத்தில் ஒரு கொரோனா நோயாளி மட்டுமே இனங்காணப்பட்டுள்ளார். ஆனாலும் இந்நோய் எமது மாகாணத்தில் பரவாமல் இருப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நோய் பரவாமல் தடுப்பதற்கும், நோய் வந்தால் சிகிச்சை அளிப்பதற்கும் சுமார் பத்தாயிரம் மருத்துவப் பணியாளர்கள் இரவு பகலாக தொடர்ந்து பணியாற்ற ஆயத்தமாக இருக்கின்றனர். தயவு செய்து நீங்கள் உங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து இந்நோய் வராது ஒத்துழைப்பு வழங்குமாறு அவர்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கின்றேன்.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு 021 222 6666 மற்றும் 021 221 7982 ஆகிய தொலைபேசி இலக்கங்களை அறித்துள்ளது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம். இந்த இலக்கங்கள் 24 மணிநேரமும் செயற்படும் என்றும் அறிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் கிளினிக் செல்பவராயின் உங்களுக்குத் தேவையான மருந்துகளை உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் கிளினிக் செல்லும் வைத்தியசாலைகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் விபரத்தை தெரிவிப்பதன் மூலம் இந்த சேவையை பெறலாம். அல்லது மேற்குறிப்பிட்டள்ள அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.

உங்கள் பிரதேசங்களில் உள்ள மருந்தகங்களின் தொலைபேசி இலக்கத்தை அறிய வேண்டுமாயின் மேலே குறிப்பிட்ட அவசர அழைப்பு இலக்கத்தை தொடர்பு கொண்டு இந்த சேவையை பெறமுடியும். இந்த சேவையை வழங்குவதற்கு தனியார் மருந்தகங்கள் தங்கள் மருந்துக்கான விலையுடன் கிலோ மீற்றருக்கு ஐம்பது ரூபாய் அறவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இருந்தும் இந்த சேவையை இலவசமாக வழங்க சில தனியார் மருந்தகங்கள் முடிவு செய்துள்ளன. இதுவரை பதிவு செய்யப்படாத மருந்தகங்களும் இந்த சேவையை மேற்கொள்ள முன்வந்தால், தங்களுக்கான அனுமதி சுகாதார அமைச்சில் இருந்து பெற்றுத்தர நேடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவர்களும் தங்கள் விபரங்களை மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.