வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் இடைநிறுத்தம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள், சில முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நிமித்தம் பிற்போடப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவிருந்தன.

இந்நிலையில் நியமனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதால், மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி புறக்கணிக்கப்பட்ட தொண்டர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அத்தோடு, போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று நியமனம் வழங்குவதை பிற்போடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் ஆளுநரிடம் வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அனைவரது புள்ளிவிபரங்களும் அடங்கிய பட்டியல் குறித்த பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அமைச்சினால் வழங்கப்பட்ட நியமங்களுக்கு மாறான அல்லது தவறான முறையில் நியமனங்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அவை தொடர்பான விபரங்களை 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விசாரணைகள் முடியும் வரையில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் பிற்போடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்குறித்த பட்டியலை வடக்கு மாகாண சபையின்இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த பட்டியலின் மூலம் ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் பெற்றுக்கொண்டுள்ள புள்ளிகள் தொடர்பான விபரங்களை அறிய முடியுமெனவும் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

https://np.gov.lk/marks-details-of-health-volunteers-and-external-candidates-who-faced-interview-2/