‘மெகா’ கூட்டணி அமைத்து மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும் அனுஷா சந்திரசேகரன்

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தனித்து களமிறங்கி 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகளான அனுஷா சந்திரசேகரன், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் தீவிரமாக ஆலோசனை நடத்திவருகின்றார் என தெரியவருகின்றது.

மலையக மக்கள் முன்னணியின் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்கள் சிலர் அனுசாவுடன் சங்கமித்துள்ள நிலையில், பொதுத்தேர்தலின் பின்னர் இளைஞர்களின் ஆதரவும் அவருக்கு பெருகிவருகின்றது.

பொதுத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தை தற்போது ஆரம்பித்துள்ள அனுஷா சந்திரசேகரன், விரைவில் அடுத்த கட்டம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

இதன்படி அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் பலமானதொரு கூட்டணி அமைத்து அதன்கீழ் அனுஷா சந்திரசேகரன் போட்டியிடுவார் எனவும், பொதுத்தேர்தலின் பின்னர் பல அமைப்புகள் அவருக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன என்றும் தெரியவருகின்றது. அனுஷா தலைமையில் களமிறங்குவதற்கு இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி மாவட்ட இளைஞர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.