முனைப்புப்பெறும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு; முடங்கிக்கிடக்கும் தமிழ் அரசியல் தலைமைகள்

 

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த விகாரையை அமைத்து சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ரஜமகா விகாரை பகுதியிலே இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது சிங்கள பௌத்த மக்களுடைய விகாரை இதை எமக்கு தர வேண்டும் அரசியல்வாதிகளுடைய பயங்கரவாத தமிழ் மக்கள் குழுவுடைய குழப்பங்கள் காரணமாக தங்களுடைய விகாரையில் குழப்பம் நிகழ்கிறது இந்த விடயமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் இதில் கரிசனை கொண்டு தமது விகாரையை தம்மிடம் பெற்றுத் தருமாறு கோரி விகாரையின் விகாராதிபதி உட்பட பல இடங்களில் இருந்து வருகை தந்த பிக்குமாரும் கொக்குளாய் மணலாறு புல்மோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இன்று மதியம் 1.30 மணிக்கு குறித்த பகுதியில் அமைக்கப்படட பாரிய புத்தர் சிலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமை தாங்கி நடத்தியிருந்தனர்.

குறித்த அத்துமீறிய விகாரை அமைக்கப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாட்டுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நீதிமன்று அனுமதி வழங்கியிருந்ததோடு இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்த நிலையில் இன்றையதினம் வெளி இடங்களில் இருந்து வருகைதந்த பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தமை மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற சூழலை உருவாக்கியுள்ளது.