சிலர் தம்மைச் சிறையில் அடைக்க முயற்சி செய்கின்றனர் எனவும், முடிந்தால் சிறையில் அடைத்துப் பார்க்குமாறும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சவால் விடுத்துள்ளார்.
கொழும்பு – மட்டக்குளியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு சவால் விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –
“மன்னாரில் மீள்குடியேற்றபணிகளை முன்னெடுப்பதற்கு ராஜபக்ஷ அரசே உதவியது. மரங்களை வெட்டுவது ஒரு பாவமான செயல் என இஸ்லாம் மார்க்கத்தில் போதிக்கப்பட்டுள்ளது. நாம் மரங்களை வெட்டி நாசம் செய்தவர்கள் அல்லர்.
வில்பத்து வனப்பகுதியை வெட்டி நாசம் செய்துள்ளோம் எனக் குற்றம் சுமத்தப்பட்டபோதும் அவ்வாறு செய்திருந்தால் தண்டனையை வழங்குங்கள். அவ்வாறு செய்திருந்தால் அதிகபட்ச தண்டனை தமக்கு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்” என்றார்.