மன்னார் புதைகுழி வழக்கு சர்ச்சை; நீதிமன்றத்தின் முடிவு 10 ஆம் திகதி!

மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதிட முடியுமா,இல்லையா என்ற சர்ச்சை தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணம் நீதிமன்றில் கையளிக்கப்பட்டதையடுத்து, எதிர்வரும் 10ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூலச் சமர்ப்பணம் நேற்று முன்தினம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த மாதம் 25ஆம் திகதி மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அந்த வழக்கு தொடர்பான எழுத்து மூலச் சமர்ப்பணத்தை இம்மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள்
முன்வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையிலேயே நேற்று முன் தினம் இந்த எழுத்து மூலசமர்ப்பணம் நீதிமன்றில் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து எதிர்வரும் 10ஆம் திகதி இவ்விடயம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்படுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.