மன்னாரில் அழிவடைந்து வரும் தமிழர் வரலாறு

இராவணன் கட்டிய கோட்டை மன்னாரின் அடையாளச் சின்னம் என பல சாதனைகளை உள்ளடக்கியது தான் அல்லிராணி கோட்டை

கம்பீரத்தின் அடையாளம் போல நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவும், அல்லிப்பூக்களின் வாசனைக்கு மத்தியில் குறித்த கோட்டை அமைந்திருப்பதனால் அல்லிராணி கோட்டை எனப் பெயர் வந்ததாக வரலாறு உள்ளது.

மன்னார் முசலிப் பிரிவிற்குட்பட்ட அரிப்புக் கிராமத்தின் கடலோரப் பகுதியில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் பெரும்பாலான பாகங்கள் அழிவடைந்து எஞ்சியுள்ள மிகுதி பகுதிகளைக் கொண்டு நிலைத்து நிற்கிறது.

இப்பகுதி மக்களால் இராவணன் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை என்றே அல்லிராணிக் கோட்டை அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆனால் வரலாறு கூறும் உண்மைகளையும் ஆராய வேண்டும்.

இலங்கைத் தீவின் முதல் பிரித்தானிய ஆளுநர் பிரட்ரிக் நோர்த்தால் உருவாக்கப்பட்ட வாஸ்தலமே இக்கோட்டை எனவும் கூறப்படுகின்றது.

ஆவரால் உருவாக்கப்பட்ட வீடு எனவும் 4 அறைகளைக் கொண்டிருந்ததாகவும் இரண்டு தட்டுக்களைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

மன்னார் தீவின் அழகிய கட்டடமாகவும், நிர்மாணக் கலைக்கு அமைவாக கட்டப்பட்ட ஒரேயொரு கட்டடம் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

ஆனால் உண்மையில் இக்கோட்டை இராவணனால் உருவாக்கப்பட்டதா? அல்லது பிரட்ரிக் நோர்தினால் உருவாக்கப்பட்டதா? என்பது தொடர்பில் சந்தேகங்கள் நிலவியவண்ணம் உள்ளது.

உண்மையில் இக்கோட்டை இராவணனால் கட்டப்பட்டதாக இருந்தால் பல யுகங்களைத் தாண்டி பரிணமிக்கும் உலகின் ஒரேயொரு கோட்டை என்ற சிறப்பை பெறும்.

தனித்த கடற்பகுதி, அலைகளின் சத்தம், அமைதியான காற்று என அல்லிராணி கோட்டையின் சிறப்பம்சம் வேறெங்கும் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே.

கடல் அலையின் தாக்கத்தால் கோட்டையின் பகுதிகள் சில கடலில் மூழ்கிப் போய்விட மிகுதி பாதியும் சுனாமியின் தாக்கத்தால் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

யுத்தகாலத்தில் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் யுத்தத்தின் பின் பெரும்பாலானோர் படையெடுக்கும் ஓரிடமாகவும் அல்லிராணி கோட்டை மாறி வருகின்றது.

முறையான புனரமைப்பு பணிகள் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இக்கோட்டை, எதிர்காலத்தில் புனரமைக்கப்படுமா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் மாறியுள்ளது.

mannar ford3 மன்னாரில் அழிவடைந்து வரும் தமிழர் வரலாறுபெயருக்கேற்ற பிரமிப்பும் அழகும் அடியோடு அழிந்து போய்விட இன்று செங்கல் சுவர் மட்டுமே இக்கோட்டையின் அடையாளச் சின்னமாகத் காணப்படுகின்றது.

தனிமையின் அடையாளமாக திகழ்ந்த அல்லிராணிக் கோட்டை இனியும் தனிமையில் அழியவிடாமல் காப்பது எம்மவரின் தலையாய கடமையும் அதேவேளை உணர்ச்சிபூர்வமான செயற்பாடும் ஆகும்.

எதிர்காலத்தில் எமக்கு தமிழில் பெயர் சொல்லும் அளவிற்கு இன்னுமொரு கோட்டை அமையப் போவதில்லை. மீண்டும் உயிர் கொடுத்து அழிந்த சுவடுகளை எடுப்போமானால் கம்பீரமாக தலைநிமிர்ந்து சொல்லலாம். நிர்மாணக் கலைக்கு அமைவாக இலங்கையில் கட்டப்பட்ட ஒரேயொரு கோட்டை அல்லிராணிக் கோட்டை என்று பெருமையாகக் கூறலாம்.