மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் குறைந்துவருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.
தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் கடந்த 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் பிரகடனப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் இந்த தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
நூட்டில் ஏற்பட்டுள்ள கொரனா வைரஸ் பீதியை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களமும் இணைந்து மட்டக்களப்பு கறுப்பங்கேணியில் பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதான பணியை முன்னெடுத்திருந்தது.
டெங்கு நோயாளிகள் அதிகளவு அடையாளம் காணப்பட்ட பகுதியாக கறுப்பங்கேணி இருந்த காரணத்தினால் இப்பகுதியில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார பணிக்குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிரமதான பணியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கே.கிரிசுதன் உட்பட மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பில் மாதாந்தம் 10 தொடக்கம் 15பேர் வரையிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கே.கிரிசுதன் இதன்போது தெரிவித்தார்.