மக்கள் தந்த ஆணையின் படியே ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேற்றம்: மஹிந்த சமரசிங்க

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அளித்த ஆணையின்படியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலிருந்தும் விலகுவதற்கு கோட்டாபய அரசு தீர்மானித்துள்ளது என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் முன்னைய அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலிருந்தும் விலகுவதற்கு கோட்டாபய அரசு தீர்மானித்திருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. மாறாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சமான எதிர்காலம்’ என்ற தொனிப் பொருளிலான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் ஏற்கனவே கூறப்பட்டிருக்கின்றது. அதற்கு அமையவே இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது” என்றார்.