மக்களின் வரிப்பணத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை குழப்புவதற்கு யாருக்கும் உரிமையில்லை. சுரேந்திரன் –

“நிறைவான கிராமம்” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மக்களின் அபிலாசைகளையும், அவர்களது தேவைகளையும் நிராகரிப்பதாக அமைந்துள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் 2020 பாராளுமன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாண மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..,

இந்த அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டு அதன் பிரகாரம் ஒவ்கிவொரு கிராமசேவகர் பிரிவிற்குமான ஐந்து மில்லியனில் முதற்கட்டமாக இரண்டு மில்லியன் ஒதுக்கப்பட்டு அதனடிப்படையில் மக்களின் தெரிவுகளின் அடிப்படையில் திட்டங்கள் முன்னுரிமைப் படுத்தப்பட்டன.

அத் திட்டங்களில் இருந்து மக்களால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டங்களை உரிய வகையில் நிர்வாக பொறிமுறைகள் ஊடாக பின்பற்றாமல் அரசியல் தலையீடுகள் காரணமாக திட்டங்கள் பின்தள்ளப்பட்டு மக்களால் முன்னுரிமை அளிக்கப்படாத அதே நேரம் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் தமது அரசியல் தனிப்பட்ட சுயலாபங்களுக்கும் ஏற்ற திட்டங்கள் முன்னுரிமை படுத்தப்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இது மக்களின் பங்கேற்பு அபிவிருத்தியையும் அவர்களது அபிவிருத்தி மீதான தேவையையும் புறம் தள்ளுவதாக அமைந்துள்ளது.

மக்களின் முன்னுரிமைப் படுத்தலுக்கு மாறாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் விவாதங்கள் நடைபெற்று அந்த விவாதங்களின் பிரகாரம் இத்திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.

இவ் இழபறிநிலையினால் சிலமாதங்களில் நாடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலைமையில் குறித்த வேலைகள் தடைப்படுவதற்கும் நிதி திரும்பிச் செய்வதற்குமான சந்தர்ப்பங்கள் உள்ளமையால் மக்களின் விருப்பங்களுக்கு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அடையாளப்படுத்தப்பட்ட தேவைகள் சார்ந்த திட்டங்களை இதய சுத்தியுடன் நிறைவேற்றப்படவேண்டும்.

யாழ். மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களின் வாக்குகளை தேசிய கட்சிகளுக்கு தாரைவார்த்துவிட்டு தற்போது புதிய அரசாங்கத்தில் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான அதிகாரத்தை பெற்றுவிட்டு அதை மக்களுக்கு சாதமாக அவர்களின் விருப்பிற்கும் முன்னுரிமைக்கும் ஏற்றாற்போல் பயன்படுத்தாமல் தமது அரசியல் சுய இலாபத்திற்காக பயன்படுத்துவதை மக்கள் இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.

அதேவேளை இந்த திட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் விரைவாக ஒரு கவனத்தினை செலுத்தி இந்த திட்டங்களை மீள திரும்ப விடாமல் இந்த பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இந்த பிரதேசங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இதனை உரிய சீர்திருத்தங்களுடன் மாற்றியமைக்க வேண்டும் அத்தோடு இந்த அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெற்றுள்ள சீர்கேடுகளை உரிய வகையில் விசாரணை செய்து அதற்காக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காலதாமதங்கள் போன்றவற்றிற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எமது மக்களின் வரிப்பணத்தில் செய்யப்படுகின்ற அபிவிருத்திகள் என்றவகையில் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக அவர்களது பிரதேசங்களை மேம்படுத்த கூடியதாக அமைய வேண்டுமே தவிர தனி நபர்களுடைய அல்லது கட்சிகளுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாக அமையக்கூடாது. இந்த வேலைத்திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தில் தான் இடம்பெறுகின்றனவே தவிர ஆட்சிக்கு வரும் எவருடைய தனிப்பட்ட பணத்திலும் அபிவிருத்தி நடைபெறவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.