போர்க்குற்றவாளியை பாதுகாத்து வருபவருக்கு இன்ரபோல் பதக்கம் வழங்கியது

உலகின் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐ.நா ஆகியவற்றால் போர்க்குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டவரை சிறீலங்கா இராணுவத்தளபதியாக நியமித்த சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு உலக பாதுகாப்பு புலனாய்வு நிறுவனமான இன்ரபோல் பதக்கம் வழங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா வந்துள்ள இன்ரபோல் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்ரொக் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேனாவுக்கு பதக்கம் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறப்பாக செயற்பட்டதற்காக இது வழக்கப்பட்டுள்ளது.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறீலங்கா அரசு முஸ்லீம் மக்களுக்கு எதிராக கலவரங்களை ஊக்குவித்திருந்ததுடன், தமிழ் மக்களுக்கு எதிராக பாதுகாப்பு வன்முறைகளையும் அதிகரித்திருந்தது.

இதனிடையே, தமக்கு சிறப்பான வரவேற்றை சிறீலங்கா அரசு வழங்கியுள்ளதாகவும், முன்கூட்டியே தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் குழுவில் சிறீலங்கா இணைந்துகொள்ள வேண்டும் எனவும் ஸ்ரோக் தெரிவித்துள்ளார்.

தமது நிகழ்ச்சி நிரலில் பயங்கரவாதமே முதன்மையாக உள்ளதாகவும், தமது உறுப்பு நாடுகள் 17 தகவல் கோப்புக்களைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ள ஸ்ரோக், அதில் 50,000 பயங்கரவாதிகளின் தகவல்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.