பொதுத் தேர்தலில் ‘மொட்டு’ தனியாகவா கூட்டாகவா? மார்ச் 19 இல் முடிவு என்கிறார் பசில்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கூட்டணியில் போட்டியிடும்போது பங்காளிக் கட்சிகளைச் சேர்த்தா, தனித்தா போட்டியிடுவது என்பதனை தீர்மானிக்க மார்ச் 19 ஆம் திகதி வரை பொறுத்திருக்குமாறு அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ கேட்டுள்ளார்.

ஆளுங்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சுதந்திரக் கட்சியின் சார்பில் இதில் கலந்துகொண்டார்.

அப்போதே இந்த விடயத்தை பஸில் தெரிவித்துள்ளார். அதற்குள் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார் . இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தொண்டமான் சில இடங்களில் கூட்டாகவும் சில இடங்களில் தனித்தும் போட்டியிடுவது குறித்து வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, ஆளுங்கட்சியின் ஒத்துழைப்பு இருந்தால் சில இடங்களில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறலாமெனத் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா இங்கு குறிப்பிட்டுள்ளார். மூன்றில் இரண்டு பெரும் பான்மை ஆதரவு தேர்தலில் சில சமயம் கிடைக்காத பட்சத்தில் தனியே கேட்கும் பங்காளிக் கட்சிகளை இணைத்து தேசிய அரசொன்றை அமைக்கலாமெனவும் அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் ஈ.பி.டி.பி. மற்றும் சில கட்சிகளை இணைத்து தேசிய அரசமைக்கலாமெனவும் பிரதமர் மஹிந்த இங்கு தெரிவித்தார்.

தொழிலற்ற ஒரு லட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்குவது குறித்து இங்கு பேசப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இவற்றை வழங்க வேண்டுமென ஒரு தரப்பும் தேர்தல் முடிந்தகையோடு இவற்றை வழங்கலாம் என இன்னொரு தரப்பும் இங்கு கூறியமையால் அதனை ஜனாதிபதியுடன் கலந்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டது.