புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது; மஹிந்த ராஜபக்ஷ

“பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயாராகும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முற்பகல் மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். பிரதமர் வாக்களிப்பதற்காக தங்காலை கால்டன் இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக அங்கு மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமரை ஆசீர்வதித்தனர்.

தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயாராகும் என தெரிவித்தார்.

அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், மேலும் தெரிவித்தவை வருமாறு;

“வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டுள்ள மக்கள் இம்முறை வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய பாராளுமன்றமொன்றை உருவாக்குவதற்கான அவசியம் காணப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்த சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமைக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும். பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் தயார்.

நாங்கள் இதனைவிட சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து வாக்களிப்பதற்கு மக்களுக்கு உள்ள ஆர்வத்தை நாம் பாராட்டுகின்றோம்.”

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதமரின் குடும்பத்தினரும், பிரதமருடன் டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து, பிரதமரின் பெற்றோரான டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தந்தினா சமரசிங்க திசாநாயக்க ஆகியோரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.