பயங்கரவாத அச்சுறுத்தல் விசாரணையால் அவதியுறும் மீனவர்கள்

தென்னிந்தியாவின் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக இந்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து  மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகின்றது.

இந்தியாவின் தமிழகம் மற்றும் கடலோர மாநிலங்கள் ஊடாக இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த தீவிரவாதிகள் கடல் வழியாக தென்னிந்தியாவிற்குள் ஊடுருவியிருப்பதாகவும், குறிப்பாக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிலைய செயற்கைக் கோள் ஏவுதளத்தில் நாசவேலைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி தென்னிந்திய நகரங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீஹரிகோட்டாவில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இணைந்து உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் கெடுபிடிகளை உண்டாக்கியுள்ளது.

இப்பகுதியில் வசிக்கும் மீனவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், சந்தேகத்திற்குரியவர்கள் தனித்தனியே அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும், இதனால் அப்பகுதி மீனவர்கள் பெரும் அச்சத்திலிருப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்