பண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை .

சித்திரைப்புத்தாண்டின் போது, பண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. இது குறித்த விசேட அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை. அத்தியாவசிய தேவைகளுக்கான போக்குவரத்துகள் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் விவசாயம், சிறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் தொடர்ந்தும் தமது தொழிலை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய பயணங்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே மக்கள் அதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.