படையினருக்கு கொரோனா தொற்று; அரசே காரணம்-சஜித்

“படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதற்கு அரசே காரணம்” என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கொரோனா வைரஸ் ஒழிப்பில், சுகாதாரத்துறையினருக்குப் பக்கபலமாக பாதுகாப்புப் படையினரே திகழ்கின்றனர். இப்போது அவர்களும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தக் கொடூர ஆட்கொல்லி வைரசை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு, தேவையான பாதுகாப்பு அங்கிகள், உபகரணங்கள் அரசால் இதுவரை வழங்கப்படாததே, இந்த நிலைமைக்குக் காரணமாகும்.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகளை அரசாங்கம் விரைவாக வழங்க வேண்டும்” எனவும் சஜித் வலியுறுத்தினார்.