நூறுக்கு மேற்பட்ட ஆலயங்களில் பிரவேசிக்கத் தடை- இந்தியாவில் அல்ல ஈழத்தில்

யாழ்குடா நாட்டின் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவகம் போன்ற பகுதிகளில் உள்ள 102 இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர யாழில் மேலும் பல இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவித்தகப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகர் முருகேசு சந்திரகுமார் இந்த விடயம் தொடர்பாக வெட்கமடைவதாகவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் அமைந்துள்ள சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் முப்பது வருடங்களாக திருவிழா இடம்பெறாதிருந்த நிலையில், கடந்த வருடம் திருவிழா இடம்பெற்றிருந்தது.

எனினும் தேர் திருவிழாவின்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எனக் குறிப்பிட்டு பக்தர்களை, வடம் பிடிக்க அனுமதிக்காது ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தேர் இழுக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பின்னணியில் இவ்வருட திருவிழாவை நடாத்தாது ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகர் முருகேசு சந்திரகுமார் மேற்கண்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.