நிக்கரகுவாவில் சூழல் பாதுகாப்பு தலைவர்கள் படுகொலை

நிக்கிரகுவாவில் உள்ள மழைக் காடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த பூர்வீகத் தலைவர்கள் ஆறு பேர் ஆயுததாரிகளால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 10 தலைவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

போசாவாஸ் பயோஸ்பெயர் வனப்பகுதியினுள் நுளைந்த 80 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவினரே இந்த படுகொலைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள வனப்பிரதேசங்களில் கனிம வளங்கள், கட்டிட வேலைகளுக்குரிய மர வகைகள் மற்றும் தங்கம் என்பன உள்ளதால் அந்த பகுதிகளில் உள்ள காடுகளை அழித்து கனிமங்களை அகழ்வதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் சில நிறுவனங்கள் முயன்று வந்துள்ளன.

ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை தடுத்து, வனத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த தலைவர்களே தற்போது கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளனர்.

அமேசான் மழைக் காடுகளுக்கு அடுத்த நிலையில் நிக்கரகுவா பகுதியில் உள்ள மழைக்காடுகளே பெரிய மழைக்காடுகளாகும்.