தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக அணிதிரளும் அவுஸ்திரேலிய பத்திரிகைகள்

அவுஸ்திரேலியாவில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுகளை எதிர்த்து அந்நாட்டின் பிரபல்யமான செய்தித்தாள்கள் தங்களுக்குள் உள்ள போட்டிகளை மறந்து ஒரே குரலில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

இன்று(21) காலையில் வெளிவந்த நியூஸ் காப் அவுஸ்திரேலியா மற்றும் நைன் மாஸ்ட்ஹெட்ஸ் ஆகிய இரண்டு பெரும் செய்தித் தாள்களும் தங்களின் முதல் பக்கத்தில் செய்தியை கறுப்பு மையால் மறைத்து அதற்கு மேலே “ரகசியம்“ என்ற வாசகத்துடன்    கூடிய சிவப்பு நிற முத்திரையுடன் வெளிவந்தன.

இந்த நூதன போராட்ட முறை அந்நாட்டில் உள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக நடத்தப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் உள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் தங்களின் செய்தி சேகரிப்பு மற்றும் தயாரிப்புகளை பாதிப்பதாகவும், அந்நாட்டில் இரகசிய கலாசாரம் ஒன்றை உண்டாக்க முயல்வதாகவும் பத்திரிகைகள் குற்றம் சாட்டுகின்றன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய அரசு தாங்கள் ஊடக தர்மத்தை மதிப்பதாகவும் அதே வேளையில் நாட்டில் யாரும் சட்டத்தைவிட பெரியவர்கள் இல்லை என்பதை வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளது.

கடந்த ஜுன் மாதத்தில் அவுஸ்திரேலியன் பிராட்காஸ்டிங் கோப்பரேஷன் (ஏபிசி) வளாகத்திலும், நியூஸ் காப் அவுஸ்திரேலியா செய்தி முகாமையைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளரின் வீட்டிலும் நடந்த பொலிஸ் சோதனைகள் ஊடகங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை எழுப்பின.

தங்கள் ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள் தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக இந்த ஊடகங்கள் குற்றம் சாட்டின.

போர் குற்றங்கள் தொடர்பாக ஒரு கட்டுரை வெளிவந்ததையடுத்து, மற்றொரு ஊடகத்தில் வெளிவந்த கட்டுரையில் அவுஸ்திரேலிய நாட்டு மக்களை உளவு பார்க்க அரசு முகாமை ஒன்று முயல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது,

இந்நிலையில் பத்திரிகைகளில் இன்று வெளியான இருட்டடிப்பு படம் குறித்து பல்வேறு பத்திரிகைகளும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் இது குறித்து கூறுகையில், பத்திரிகை சுதந்திரம் அவுஸ்திரேலிய ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதேவேளையில் நாட்டின் சட்டமும் காக்கப்பட வேண்டியதாகும் என்று குறிப்பிட்டார்.

“அது நானாக இருந்தாலும் சரி, அல்லது பத்திரிகையாளராக இருந்தாலும் சரி, அல்லது வேறு யாராவது ஒருவராக இருந்தாலும் சரி அனைவரும் சட்டத்தின் முன் சமமே” என்று அவர் தெரிவித்தார்.