திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயதான சுஜித் என்ற சிறுவன் மரணமடைந்துள்ளதாக தமிழகத்தின் வருவாய்த்துறை செயலாளர் இராதாகிருஸ்ணன் இன்று (29) தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அறிவித்தல் வெளிவருவதற்கு முன்னர் அதிகாலை ஒரு மணியளவில் மிக அதிகளவிலான காவல்துறையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டினர்.
ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மீட்புப்பணிக்காக மற்றுமொரு குழி தோண்டப்படும் பணிகள் இடம்பெற்றுவரும் போதும், அதிகாலை ஒரு மணியளவில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கடுமையான விவாதங்களை மேற்கொண்ட பின்னரே இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.
குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக செயலாளர் காலை 9.30 மணியளவில் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (25) மாலை 5.30 மணியளவில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த குழந்தையை மீட்பதற்கு 80 மணிநேரம் இந்திய அரசு தன்னிடம் உள்ள வளங்களை பயன்படுத்தி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்விகண்டுள்ளது பல விமர்சனங்களைத் தோற்றுவித்தள்ளது.
இதனிடையே, சுஜித்தின் உடல் பரிசோதனைகளுக்குப் பின்னர் புதூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தின் துணைமுதல்வர் ஓ பன்னீர்ச்செல்வம் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.