திங்கட்கிழமைக்குப் பின்னரும் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை அறிவிக்கப்படும்

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து நாளை ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாகத் தடை செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“நாட்டில் உருவாகியுள்ள நிலமைகளுக்கு மத்தியில் மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தத் தீர்மானம்மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் ஒரு மீற்றர் தூரத்தில் தனிநபர் இடைவெளியைப் பேணுமாறு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் பேணுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பேருந்து மற்றும் ரயில் சேவை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பேணுவதற்காக பஸ்களிலும் ரயில்களிலும் பயணிகள் பயணம் செய்வதற்கான எண்ணிக்கையில் அரைவாசி எண்ணிக்கையானோர் மட்டுமே பயணிக்க முடியும்.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் ஏனைய பொருள்களை சதொச கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்கு போதுமானளவு அரசு விநியோகித்துள்ளது. மக்கள் அசெளகரியத்திற்குள்ளாகாத வகையில் அவற்றை விநியோகிக்குமாறு அந்த விற்பனைநிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றுள்ளது.