தாயகத்தில் சிறுமிகள் மீது வண்புனர்வு- சீர்கெட்டு போகும் சமுதாயம்

வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த பல நாட்களாக வன்புணர்வு செய்துவந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் தெரியவருகையில்,

வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாள்களாக வீட்டில் இருந்த உறவினர் ஒருவர் பாலியல் வன்புணர்வு மேற்கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சிறுமியை விசாரித்தபோது தனக்கு நடந்த சம்பவங்களை சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோரால் பூவரசங்குளம் பொலிஸில் நேற்று மாலை செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய வன்புணர்வு குற்றச்சாட்டின்கீழ் உறவினரான 30 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து அவரது தந்தை பாலியல் வன்புணர்வு மேற்கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய சிறுமியின் தந்தையான 41 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் மாங்குளம் பகுதியில் 17 வயது யுவதி ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையையடுத்து அந்த யுவதியின் தந்தையான 39 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யுவதி மற்றும் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரும் மருத்துவப்பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.