தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் அரசுக்கு முன்னாள் எம்.பி சிவமோகன் கோரிக்கை

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பாதுகாப்பு கோரி ஏற்பட்டுத்தப்பட்ட முரண்பாட்டை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரனா வைரஸ் தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சில கைதிகள் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந் நிலையில் ஏனைய கைதிகள் தமக்கான மருத்துவ பாதுகாப்பை கருத்தில் கொண்டு தம்மை விடுவிக்குமாறு கோரி சிறைக்காவலர்களுடன் முரண்பட்டதாக அறியமுடிகின்றது.
இதன் காரணத்தினால் கைதிகள் சிறைக்கூடங்களின் கதவுகளை உடைத்து பிரதான கதவினை உடைக்க முற்பட்டபோது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் காரணமாக மூன்று கைதிகள் படுகாயமடைந்த நிலையில் உயிர் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இச் சூழலில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக உறுதிப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பை வழங்க ஆவன செய்ய வேண்டும்.
அத்துடன் சிறைச்சாலைக்குள் கண்ணீர்ப்புகைக்குண்டுகளும் வீசப்படுவதால் அங்குள்ள கைதிகள் அனைவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே கண்ணீர்ப்புகைக்குண்டுகளால் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு சௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ள கைதிகள் அனைவரையும் மனிதர்களாக எண்ணி மனிதாபிமானமாக இந்த அரசு நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.