தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவோம் – மங்கள

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு தொடர்பில் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்துடன் பகிரங்கமாக வெளியிடுவோம்.     நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சிங்கள கிராமங்கள் மற்றும் விகாரைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று எம்மிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருப்பதாக சிங்கள பத்திரிகையொன்றில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியை ஒருபோதும் பெற்றுக்கொண்டதில்லை. புலிகளிடம் திரைமறைவில் நிதிபெற்று மஹிந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதைப்போன்று நாம் செயற்பட்டதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு தொடர்பில் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்துடன் பகிரங்கமாக வெளியிடுவோம். எம்முடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம். அதனூடாக பிளவுபடாத ஒருமித்த நாட்டிற்குள் எவ்வித இன,மத பேதங்களுமின்றி அனைவரையும் ஒற்றுமையுடன் வாழச்செய்வதற்கான சஜித் பிரேமதாஸவின் தூரநோக்கு சிந்தனையை விளங்கிக்கொள்ள முடியும்.

அதேபோன்று மறுபக்கத்தில் கோதபாய ராஜபக்ஷ, இராணுவத்தினரை பாதுகாத்த ஒருவரைப் போன்று சித்தரிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனால் உண்மையில் கோத்தபாய ராஜபக்ஷ என்பவர் நாட்டில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் நாட்டைவிட்டுத் தப்பிச்சென்ற ஒருவராவார் என்றும் அவர் தெரிவித்தார்