தமிழரின் கலைத் திறனும்,மொழிச் சிறப்பும் ஓங்கி நிற்கும் பெரும் கோவில்- கல்யாணி

உலகில் தமிழ் மொழியும் தமிழரின் பண்பாடு, கலாச்சாரமும் தொன்மையானது என தற்போதைய ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன. அத்துடன் அதற்கான சரியான காலத்தை வரையறுத்துக் கூற முடியாத அளவிற்கு அவை மிகத் தொன்மை யானவையாக காணப்படுகின்றன.

இது ஒருபுறமிருக்க மற்றொரு புறம் தமிழையும், தமிழ் மக்களையும், அவர்களின் கலாச்சார, பண்பாடுகளையும் அழிக்கவும் அவற்றை திரிபுபடுத்தி மாற்றி அமைப்பதற்கும் ஒருசாரார் முயற்சி செய்து வருகின்றனர். இதேவேளை இவற்றை எதிர்த்து தமிழை வளர்க்கவும், தமிழரின் தொன்மையை உலகறியச் செய்வதற்கும் தற்போதைய இளைய சமுதாயம் முயற்சி செய்து வருகின்றது. இவர்களின் முயற்சியினால் தமிழ் மீண்டும் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழரின் கலை, சிற்பம், ஓவியங்கள் இன்றும் உலகில் எல்லோராலும் போற்றப்படும் ஒன்றாகவும், அதிசயிக்கத்தக்க ஒன்றாகவும் விளங்குகின்றது. அத்துடன்  தமிழனின் கட்டடக்கலையின் பெருமையை எடுத்துக்கூறும் வகையில் அமைந்த ஓர்  இடம் தான் இந்தியா, தமிழ்நாடு தஞ்சாவுர் மாவட்டத்தில் அமைந்துள்ள தஞ்சைப் பெருவுடையார் கோவில் அல்லது தஞ்சைப் பெருங்கோவில் ஆகும்.  தமிழர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக் கொண்ட, இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

இந்தியா, தமிழகம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள பெருவுடையார் கோவில் குடமுழுக்கு  கடந்த 05ஆம் திகதி  பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டது. முன்னர் 1997ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி  குடமுழுக்கு நடத்தப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப்  பின்னர் இப்போது குடமுழுக்கு  நடைபெற்றுள்ளது.Tanjore Temple தமிழரின் கலைத் திறனும்,மொழிச் சிறப்பும் ஓங்கி நிற்கும் பெரும் கோவில்- கல்யாணி

இந்தக் கோவில் இந்தியாவிலேயே வரலாற்று சிறப்பு மிக்க ஓர் சிவத்தலம் என்பதுடன், இதன் கட்டடக்கலை பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1000 வருடங்களைக் கடந்தும்  புதுப் பொலிவுடன் விளங்கும் இந்த கோவில்,  சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகின்றது. இந்த தலம் திருவிசைப்பா பாடல் பெற்ற ஓர் சிவத்தலமாகும். இந்த கட்டடக் கலையை ஆராய்ச்சி செய்வதற்கும், பார்த்து ரசிப்பதற்குமாகவே உலக மக்கள் இங்கு வருவதுண்டு.

இந்தக் கோவிலின் அளவைப் பார்த்த மக்கள் இதை பெருங்கோவில் எனக் குறிப்பிட்டு வந்தமையால், அது தஞ்சைப் பெருங்கோவில் என தற்போதும் அழைக்கப்படுகின்றது.

குடமுழுக்கு நிகழ்வில் பெரும்பாலான அரசியல்வாதிகள் கலந்து கொள்வதை தவிர்த்தனர்.  பொது மக்கள் கலந்து கொண்ட நிகழ்வாகவே இருந்தது. இம்முறை தமிழில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட வேண்டுமென இந்து சமய அறநெறித்துறையினர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

இறுதியில் நீதிமன்றத் தீர்ப்பில் சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது. 1980 மற்றும் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்விலும் தமிழிலும், சமஸ்கிருதத்திலுமே மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன. இலட்சகணக்கான பக்தர்கள் குடமுழுக்கு காண குவிந்ததால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

காலை 7 மணி முதல் பக்தர்கள் குடமுழுக்கு காண கோவிலுக்குள் வரிசையாக அனுப்பப்பட்டனர். நேரம் செல்ல செல்ல எண்ணிக்கை கட்டுக் கடங்காத அளவுக்கு காணப்பட்டது. அவர்களை போலீசார் கடும் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5500 போலீசார்   பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோயில் உருவான வரலாறு

சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது. சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் கி.பி.943ஆம் ஆண்டு ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்த அருண்மொழித்தேவன் (அருண்மொழிவர்மன்) என்பவரே இந்தக் கோவிலைக் கட்டியவராவார். 1004இல் கட்டத் தொடங்கி 1010ஆம் ஆண்டளவில் கட்டி முடிக்கப்பட்டது.

இவர் ஓர் சிவபக்தராவார். இவர் ராஜகேசரி என்ற பட்டப்பெயருடன் ராஜராஜ சோழன் மற்றும்  42 சிறப்புப் பெயர்களையும் பெற்றார். ஆனால் இப்போது ராஜராஜ சோழன் என்ற பெயரே எல்லோராலும் வழங்கப்பட்டு வருகின்றது. அவர் அரியணையில் ஆட்சி செய்த போதே இந்தப் பெயர் வழங்கப்பட்டது. ஆனால் அவர் சிவபாத சேகரன் என்ற பெயரையே விரும்பி ஏற்றுக் கொண்டார்.Rajendra Chola Gangaikondasolapuram தமிழரின் கலைத் திறனும்,மொழிச் சிறப்பும் ஓங்கி நிற்கும் பெரும் கோவில்- கல்யாணி

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோவிலைப் பார்த்ததும் ஆசைப்பட்ட அருண்மொழித்தேவன் தானும் ஓர் கோவிலைக் கட்ட வேண்டும் என எண்ணியே தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டினான்.

கோயில் வடிவமைப்பு

தமிழனின் கட்டடக்கலைக்கு ஓர் சிகரமாக விளங்கும் இக்கோவில் 750 அடி நீளமும், 400 அடி அகலமும் கொண்ட கோட்டைச் சுவருக்குள் அமைந்துள்ளது. உள்ளே 240 அடி நீளமும், 120 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட நீள் சதுர நிலப்பகுதியைக் கொண்ட இக்கோவிலின் நடுப்பகுதியில், கருவறையின் மேல் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இது எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக அமைந்துள்ளதுடன்,  மொத்தம், 13 நிலைகளயும் கொண்டுள்ளது.

இதன் உயரம், 216 அடி ஆகும். ஒவ்வொரு நிலையின் உயரமும், சுற்றளவும் குறைந்து கொண்டே வந்து உயரத்தில், ‘பிரமிட்’ போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.  இதுவே உலகிலேயே மிகப் பெரிய விமானம் என்று கூறப்படுகின்றது. இது தட்சிணமேரு என்று அழைக்கப்படுகின்றது. பீடம் தொடங்கி கலசம் வரை முழுவதும் கருங்கல்லினாலே கட்டப்பட்டுள்ளது. புராணங்களில் இது பொற்கிரி என்று போற்றப்பட்டுள்ளது. எட்டுத் திசைகளும் ஒவ்வொரு சந்நிதிகளையும் கொண்டுள்ளது. அத்துடன் 216 அடி உயரமுடைய கோவிலுக்கு அத்திவாரம் வெறும் 5அடி மட்டுமேயாகும்.

மரம், இரும்பு போன்ற பொருள்களைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்கக் கற்களை மட்டுமே கொண்டு இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளதானது தமிழனின் கட்டடக்கலையின் நுட்பத்தையும், திறமையையும் எடுத்துக் கூறுகின்றது. இந்தக் கோவில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை என்று பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

216 அடி உயரம் கொண்ட விமானக் கோபுரம் மற்றும் அதன் கட்டுமான அமைப்புகளை உலகப் பொறியியல் வல்லுநர்கள் பார்த்து வியக்கிறார்கள். இங்கு கருவறை மிகத் துல்லியமான சதுரமாக நான்கு பக்கமும் சிறிதும் பிசிரின்றி கட்டப்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டு கல்வெட்டு அறிஞர் ஹல்ஸ், 1896 இல் இங்குள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தார்.  ஒரு அங்குலம்கூட  அளவில் பிழைக்காது ஒரேயளவாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார்.

இதேபோல் சிவலிங்கத்தின் மையப் பகுயில் நேர் மேலாக சென்றால் அது கோபுரத்தின்  மையப் பகுதியாக இருக்கும்.  விமானத்தின் மேல் முனையில் வட்ட வடிவமாக அமைக்கப்பட்ட கல் காணப்படும். விமானக் கோபுரத்தின் உட்புறம் உள்ள மேல் அறை ஒன்றில் 108 கர்ணங்கள் கொண்ட பரத நாட்டியச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கீழ்த் தளத்தில் அருண்மொழித் தேவன் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. மேலும், மழை நீர் சேகரிப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நுழைவு வாயிலில் உள்ள 45 அடி உயரம் கொண்ட நிலைக்கால்கள் ஒரே கல்லால் கட்டப்பட்டவை.

இந்தக் கோவிலில் உள்ள ஓர் சிறப்பம்சம் என்னவெனில், எல்லாக் கோயில்களிலும் கோபுரங்களே உயரமாகக் காணப்படும். ஆனால் இங்கு மூலவர் சந்நிதான  கருவறையின் விமானத்தைப் பெரிதாகவும், கோபுரத்தை சிறிதாகவும் கட்டியுள்ளனர். இங்கு இருக்கும் சிவலிங்கம் 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகும்.

பிரமாண்ட கோவிலைப் போலவே 80 தொன் எடை கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட நந்தி சிலை கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 14மீற்றர், நீளம் 7மீற்றர், அகலம் 3 மீற்றர் ஆகும்.

தமிழ் பெருமையை  எடுத்துக் கூறும்  அம்சங்கள்

கருவறை உயரம் 216 அடியாகும். உயிர்மெய் எழுத்துக்கள் 216இந்தக் கருவறையில் இருக்கும் சிவலிங்கம் 12 அடி உயரமுள்ளது. உயிர் எழுத்துக்கள் 12இது ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவலிங்க பீடத்தின் உயரம் 18 அடியாகும். மெய் எழுத்துக்கள் 18 ஆகும். சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும் இந்த அளவுகள் தமிழ் மொழியை ஒத்திருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

3941425438 964397c77e b தமிழரின் கலைத் திறனும்,மொழிச் சிறப்பும் ஓங்கி நிற்கும் பெரும் கோவில்- கல்யாணி
Inscriptions at Thanjavur Periya Kovil

இங்கு காணப்படும் 107 கல்வெட்டுக்களும் தமிழ் மொழியிலேயே அமைந்துள்ளதானது தமிழை எடுத்துக் கூறும் ஒரு சிறப்பம்சமாகக் காணப்படுகின்றது. இந்தக் கல்வெட்டிலே கோவிலைக் கட்டியவர்கள், கோவில் கட்டுவதற்கு உதவி புரிந்தவர்கள் மற்றும் கோவில் கட்டடப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரது பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இறுதிப் பேராக அருண்மொழிச் சோழனின் பெயர் ராஜராஜ சோழன் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலை 1987இல் யுனெஸ்கோ நிறுவனம் உலக மரபுச் சின்னம் என்று அறிவித்தது. இதையடுத்தே வெளிநாட்டவர்களும், மதவேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் இந்தக் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

இந்தக் கோயில் பற்றிய மூட நம்பிக்கைகள்

இந்தக் கோயில் பற்றி பல மூடநம்பிக்கைகள் பரவி வருகின்றன. இந்தக் கோயிலுக்கு செல்லும் அரசியல்வாதிகள் பதவிகளை இழப்பதுடன், அவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து நேரும் என்பது பலரின் நம்பிக்கையாகவும் உள்ளது. இதன் காரணமாகவே கோயில் குடமுழுக்கு நடைபெற்ற போது, பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள்  கலந்து கொள்ளவில்லை.

மற்றும் இக்கோயிலின் நிழல் நிலத்தில் விழாது என்பதும் ஒரு நம்பிக்கை. ஆனால் இந்தக் கோபுரத்தின் நிழல் கீழே விழும் என்பதே அறிவியல் கருத்தாகவும் இருக்கின்றது.

சவால்களும் சாதனையும்

இந்தக் கோவில் தமிழர்களின் பெருமையையும், தமிழனின் கட்டடக்கலை நுட்பங்களையும் கலை, சிற்பம், ஓவியம் என அனைத்தையும் போற்றும் அளவில் அமைந்துள்ளது என்பது நாம் பார்த்தவையே. ஆனால் தற்போது மொழித் திணிப்பு என்பது எல்லா நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது. இதற்கு ஒத்ததாகவே இக்கோவிலில் தமிழில் வழிபாடு செய்வதும், அர்ச்சனைகள் செய்யப்படுவதும் தடுக்கப்படுகின்றது. சமஸ்கருத மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகின்றது.

19ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோவிலின் பெருமையை பெரிதாக எவரும் கருதவில்லை. அதன் பின்னரே இந்தக் கோவிலின் கட்டடக்கலை, தமிழின் தொன்மை, கலை, கலாசார தொன்மை பற்றி அறிவதற்கு பலரும் முன்வந்தனர். இதனையடுத்தே தஞ்சைப் பெருவுடையார் என்பது தஞ்சை பிரகதீஸ்வரர் என அழைக்கப்பட்டது. அருண்மொழித்தேவன் ராஜராஜசோழன் என அழைக்கப்பட்டான். தமிழ் மறைக்கப்பட்டு சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என கருதப்பட்டது.

ஆனால் தற்போதுள்ள தமிழ் ஆர்வலர்களும், சமூகசேவகர்களும் இந்தக் கோவில் தமிழரின் பண்பாட்டைக் கொண்டாடும் கோவில் எனவும், கலை, சிற்பங்கள் தொன்மையானது எனவும் பதிவு செய்வதற்கு முயற்சித்து வருகின்றனர். தமிழர்களின் கட்டடக்கலையைப் போற்றும் கோவிலான தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் தமிழில் வழிபாடு செய்யப்பட வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை.

அதன் முதலடியாக இம்முறை தமிழிலும் குடமுழுக்கு நிகழ்த்தப்பட்டது தமிழினத்துக்கு நம்பிக்கையூட்டும் ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இந்தியாவில் உள்ள சில கோவில்களில் தமிழில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகின்றது. அதேபோல ஈழத்தில் இணுவிலில் அருள்மிகு ஞானலிங்கேஸ்வரர் கோவில், சுவிற்சலாந்து பெர்ன்  அருள்மிகு ஞானலிங்கேஸ்வரர் கோவில் என்பவற்றில் தமிழில் வழிபாடு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.