தனிச் சிங்கள அரசை உருவாக்க வேண்டும்: ஞானசார தேரர் அழைப்பு

தனிச் சிங்கள அரசை உருவாக்கி, அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ், முஸ்லிம் புதிய அரசியல் தலைவர்களை அதற்குள் உள்ளவங்கவேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நேரத்தில் இருந்து இன்று வரை தான் ஒரு சிங்கள பெளத்த தலைவன் என்பதைப் பல செயற்பாடுகளின் ஊடாக நிரூபித்துள்ளார்.

நாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்படவேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்றவேண்டும் என்ற கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் பாரம்பரிய முறைமைகளே பல நெருக்கடிகளுக்கும், அரச நிர்வாகத்துக்கும் தடையாக உள்ளன. எனவே உருவாகும் தனிச் சிங்கள அரசில் அடிப்படைவாதக் கொள்கைகளற்ற தமிழ் – முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல்வாதிகள் உள்வாங்கப்படவேண்டும்” என்றார்.