டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 56 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாயின. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிற்பகலில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 தொகுதிகளில் 56 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை வகித்து வருகிறார். பட்பர்கஞ்ச் தொகுதியில் மணீஷ் சிசோடியா முன்னிலையில் உள்ளார்.

டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலை போலவே இம்முறை மும்முனைப் போட்டி நிலவியது. ஆளும் ஆம் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி இருந்தது.

டெல்லியில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இங்கு ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்றாலும் அக்கட்சி கடந்த தேர்தலை விட இம்முறை குறைந்த தொகுதிகளையே கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.