சுவிஸ் தூதரக ஊழியர் விடயத்தில் அரசு பொய் சொல்கின்றது: சரத் பொன்சேகா

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தப்படவில்லை என அரசு கூறுவது உண்மையயன இன்னமும் நம்ப முடியாதுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நாட்டில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை. சுவிஸ் தூதரகப் பெண் அதிகாரியின் கடத்தல் விடயத்தில் வெள்ளை வான் கடத்தல் இடம்பெறவில்லை, அவர் அச்சுறுத்தப்படவில்லை என அரசும் பொலிஸாரும் என்னதான் கூறினாலும் அரசு கூறுவது உண்மையென இன்னமும் மன சாட்சிக்கு ஏற்ப நம்ப முடியாது உள்ளது.

அவ்வாறு நடக்கவில்லை என்றால் அதனை நிருபிக்க அரசு சரியான காரணிகளை முன்வைத்திருக்கவேண்டும். ஒரு நல்ல வேலையில் இருக்கும் பெண், குடும்பம் பிள்ளைகள் என இருக்கும் பெண் ஒருவர் புதிய அரசு உருவாக்கப்பட்ட 10 நாள்களில் தனது உயிர், குடும்பம், பிள்ளைகளின் உயிரைக்கூடப் பொருட்படுத்தாது இவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைப்பாரா? அதுவும் இவர்களின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் நன்றாகத் தெரிந்த ஒருவர் அவ்வாறு முறைப்பாடு ஒன்றைச் செய்வாரா?” என்றார்.