சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் ஒரு பொய் நாடகம்;ஆதாரங்கள் கிடைத்துள்ளன-எஸ்.பி.திஸாநாயக்க

இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய இலங்கை பெண் ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பொய்யானது என்பதை நிரூபிப்பபதற்கான பல ஆதரங்கள் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய இலங்கை பெண் ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பொய்யானது என்பதை நிரூபிப்பபதற்கான பல ஆதரங்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
கிடைத்துள்ள ஆதரங்களின் அடிப்படையில் குறித்த பெண்னுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.

அவர் யாராலும் கடத்தப்படவுமில்லை. வேறு ஏதேனுமொரு நோக்கத்துக்காக அந்த பெண் ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறி சிறப்பானதொரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இவற்றை தெளிவுபடுத்தும் போதுமானளவு சாட்சிகள் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் குறித்த நேரத்தில் எவ்வித சம்பவங்களும் பதிவாகவில்லை. அவர் சென்ற இடம், இறங்கிய இடம் , மீண்டும் வந்த இடம் தொடர்பான அனைத்து தகவல்களும் படங்களுடனும், காணொளிகளுடனும் ஆதாரங்களாகக் இரகசிய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ள ஆதாரங்களைத் தாண்டி குறித்த பெண் ஊழியருக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றிருந்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர் நேரடியாக பொலிஸாரிடம் சாட்சியமளிப்பதே ஒரே வழியாகும்.

எவ்வாறிருப்பினும் சுவிஸ் தூதரகத்தின் இந்த செயற்பாட்டால் புதிய அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் அவ பெயரை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என்றார்.