சுவிற்சலாந்தும் கோரோனோ வைரசும்;வதந்திகளை தவிர்த்து உண்மை நிலையை அறியுங்கள்

பறவைக்காச்சலில் இருந்து உருவம் மாறி «மலர் மகுடம்» எனும் பொருள் கொண்ட பெயரில் கொறோனா எனும் உயிர் கொல்லக்கூடிய கிருமி இன்று மூன்றாவது உலகப்போரை நோய் வடிவில் தொடங்கி இருக்கின்றது. சீனாவில் பிறப்பெடுத்து அண்டை நாடுகள் முதல், உலகம் முழுவதும் பரவி இன்று ஐரோப்பாவையும் அதன் நடுவில் சுவிறடசர்லாந்தையும் முற்றுகையிட்டு விட்டது.

டிசம்பர் 2019 முதல் இந்நோயின் பரவல் தொடரந்திருந்தாலும் 20 பெப்பிரவரி முதல் சுவிசை அணுகிய நோய், திடீர்பரவலால் இத்தாலிக்குப் போட்டியாக சுவிசிலும் நோய்பரவச் செய்துள்ளது.

சமூக அக்கறை என்ற பெயரில் அறிந்ததையும், அறியாததையும் சிலர் தெரிந்தும் – தெரியாமலும் சமூகவலைத் தளங்களில் பெரும் பதற்றத்தை தங்கள் பங்கிற்குப் கொழுத்திப் போயுள்ளார்கள். பாட்டி வைத்தியம் முதல், சித்த வைத்தியம், உணவில் இரசம் வரை பலரும் பல வைத்தியங்களும் தம் விருப்பம்போல் பரப்பியும் விட்டுள்ளார்கள்.

வளர்ந்த சுவிற்சர்லாந்து நாடு பேரிடர் பெருங்குழுவொன்றைக் கொண்டதாகும். இருந்தபோதும் யப்பான் நாடு எடுத்த நடவடிக்கையினை ஏன் சுவிற்சர்லாந்து எடுக்கவில்லை என்று எம்மில் கேட்போரும் உண்டு. 13. 03. 2020 பிற்பகல் நடைபெற்ற பொதுக்கூடத்த்தில் சுவிசின் நான்கு நடுவன் அரச அமைச்சர்கள் பங்கெடுத்து தத்தமது துறைசார்பில் எட்டப்பட்டிருக்கும் புதிய நடவடிக்கைகளை விளக்கினர்.

அப்போது நீங்கள் திடீரென இம்முடிவுகளை ஏன் எடுக்கின்றீர்கள் என்றும் வினாவப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அமைச்சர் நாம் முற்கூட்யே முடிவுகளை எடுப்பது சிறந்தல்ல. கிரிமித்தொற்றின் போக்கே எமது செயல்களை முடிவெடுத்தது. எதுவும் நடக்காதபோது நாம் முடங்கி இருப்பின் அதுவும் சிறந்ததல்ல, இப்போது எச்செயலும் ஆற்றாமல் இருப்பதும் சிறந்ததல்ல. இன்று நாம் அறிவிக்கும் முடிவுகளை அறிவிக்க இன்றே பொருத்தமான நாளாகும். யேர்மன் நாட்டின் மருத்துவ ஆய்வு சிறார்களை கொறோனா பாதிக்கவில்லை என்றும், அப்படிப் பாதிப்பு அடைந்திருந்தாலும் சிறார்கள் மற்றும் இளையோர் உடல் அந்நோயின் தாக்கத்தினை வெளிக்காட்வில்லை என்றும், நோயின் அறிகுறிகள் இல்லாதா இளவயதினர் வீடுகளில் உள்ள முதியோர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு கொறோனாவை பரப்பக்கூடிய ஆபத்து இருப்பதாலும் பாடசாலைகளை மூடுவது நோய்த்தொற்றைக் குறைக்கும் என்ற முடிவிற்கு தாம் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனமும் இக் கொறோனா காலத்தில் தமது நிறுவனங்களின் நலனையும் அதேநேரம், பேரிடர் ஏற்பாட்டால் எப்படித் தாம் முகம் கொடுத்து செயற்பட வேண்டும் என்ற ஒத்திகையினையும் தமது தொழிலாளர்களுடன் சேர்ந்து பயிற்சி செய்து வருகின்றது. இப்படியான முன்னேற்பாட்டுக்கூடத்தின் தகவல்கூட கடந்தவாரத்தில் பேர்ன் மாநிலத்தில் அமைந்திருக்கும் «சோன்பூலில்» பெரும் அங்காடியான «சொப்பிலாண்ட்» பூட்டப்படவுள்ளது என்ற தவறான செய்தியையும் பரப்பச் செய்தது.

இதுபோன்ற வதந்திகளுக்கும் பதில் அளிப்பதாக 13. 03. 2020 அன்று சுவிற்சர்லாந்தின் அதிபர் தெரிவித்த கூற்று கீழ்கண்டவாறு அமைந்தது: சமூகவலைத்தளங்களி;ல் தவறான செய்திகள் பரவுகின்றன. நாம் எவ்வேளையும் கடைகளைப் பூட்டமாட்டோம் என்றார். செய்தியாளர் இடைமறித்து இத்தாலியில் நிறுவனங்கள் பூட்டப்படதுபோல் என்று உவமை சொன்னார். சுவிஸ் அதிபர் அதனையும் திருத்திச் சொன்னார் இத்தாலியிலும் உணவு மற்றும் அடிப்படை பொருட்கள் விற்கும் அங்காடிகள் முழுமையாக மூடப்படவில்லை என்றார்.

உண்மையான அக்கறை என்பது மக்களை அச்சப்படுத்துவது கிடையாது. மாறாக சுவிற்சர்லாந்தின் துறைசார் மருத்துவ மற்றும் பேரிடர் நீக்கும் சிறப்புக் குழு உறுப்பினர்கள் வழங்கும் மதியுரைகளைப் பொருள்மாறாமல் உண்மையுடன் எளிமுறையில் புரியக்கூடியதாக பொதுமக்களுக்கு சென்றடையச் செய்வதாகும். பொதுமக்களைக் கலகப்படுத்தி, பொருட்களை வாங்கி அடுக்குங்கள் என்று குழப்பிவிடுவது எந்த நலனையும் கொடுக்காது. ஆதாரமற்ற செய்திகளை சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பகிர்வதைத் தவிருங்கள், வீண் பதற்றத்தை ஏற்படுத்தாதீர்கள்.

சுவிசில் கொறோனா தொடர்பான உண்மையான செய்தியினை சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் இணையப் பக்கத்தில் சென்று பாருங்கள் டொச், பிறெஞ், இத்தாலி மற்றும் ஆங்கில மொழியில் தகவல்கள் உடனுக்குடன் தரவேற்றப்படுகின்றது:

https://www.bag.admin.ch/…/situation-schweiz-und-internatio…

பொய்ச் செய்தியை படிக்காதீர் – பரப்பாதீர்.

சுவிற்சர்லாந்து நடுவன் அரசு வெளியிட்டிருக்கும் பேரிடர்கால நடவடிக்கைச் சுருக்கம்:

28. 09. 2012ம் அண்டு இயற்றப்பட்ட (திருத்தப்பட்ட) சுவிற்சர்லாந்து அரச யாப்பின் 184வது சட்டம் 3ம் மற்றும் 185வது 3ம் பிரிவிற்கமைய இவ்விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

பேரிடர் நடவடிக்கையின் நோக்கம் இதுவாகும்:

13. 03. 2020 வெள்ளிக்கிழமை சுவிற்சர்லாந்தின் நடுவன் அரசு சிறப்பு விதி கொறோனா கிரிமி பரவலைத் தடுப்பதற்கும், தொற்றை மட்டுப்படுத்திக்கொள்வதற்கும், பெருமளவில் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், இத் தொற்றால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய வயதெல்லை உடையவர்களைக் காப்பதற்கும், பெருந்தொற்றுக் காலத்தில் சுவிற்சர்லாந்து நாட்டின் நலவாழ்வுத் (சுகாதார) துறையின் வளங்களைப் பேணிக்காப்பதற்கும் அமைக்கப்படுகின்றது.

நலவாழ்வு (சுகாதாரத்துறையின்) வலுவைப் பேணுவதற்கு எல்லைப் போக்குவரத்து வரையறுக்கப்படுகின்றது

சுவிற்சர்லாந்தில் வாழும் மக்களின் நலனைப் பேணுவதற்கு நோய்த் தொற்றினைப் பெருக்கக்கூடிய பகுதிகளில் இருந்து சுவிசிற்குள் வரும் மக்களை வரையறுக்க வேண்டி உள்ளது.

நோய்த் தொற்றினை அதிகரிக்கும் பகுதி என சுவிசால் நோக்கப்படும் இடம் சுவிற்சர்லாந்துடன் எல்லையினைக் கொண்டு, அங்கு கொறோனா காரணமாக அவசரகால நடைமுறை அமுல் படுத்தப்பட்டிருந்தால் அப்பகுதி இவ்வாறு நோக்கப்படுகின்றது. தற்போதைக்கு இது இத்தாலி நாட்டிற்கு மட்டுமே பொருந்தும்.

கீழ்க்காணும் தகை உடையோர் மட்டுமே சுவிற்சர்லாந்து எல்லைகளில் என் நேரமும் உள் நுழைய முடியும்:

• சுவிற்சர்லாந்துக் குடியுரிமை

• சுவிசில் தங்குகை அல்லது வதிவிட அனுமதி

• சுவிசில் தொழில் செய்ய அல்லது வியாபாரம் செய்ய அனுமதி உள்ளோர்

• தொழில்ரீதியாகப் பொருட்களை கொண்டுசெல்வோர் – வழங்கல் பணிசெய்வோர்

• சுவிற்சர்லாந்து ஊடாக 3வது ஒரு நாட்டிற்கு பயணம் செய்வோர்

• மிகுந்த அவசரநிலையில் உள்ளோர், தக்க சான்றுகளுடன்

சுவிசிற்குள் உள்நுழையும்போது எல்லைக்காப்பு அதிகாரிகளிடம் மேலே குறிப்பிட்ட தகையினை உறுதிப்படுத்த வேண்டும். முறைகேடாக நாட்டிற்குள் நுழைய முயன்றால் சட்டப்படி தண்டிக்கப்பட்டு, சுவிற்சர்லாந்திற்குள் நுழையத் தடை விதிக்கப்படும்.

செங்கன் நாட்டின் விமான நிலையத்தில் இருந்து உள் நுழைந்தாலும் அல்லது விமானம் மூலம் சுவிசிற்குள் நுழைந்தாலும் மேலான விதிகள் பொருந்தும். தேவைப்பட்டால் தொற்று அபாயம் உள்ள நாடு அல்லது பகுதி நாட்;டுடன் விமானப் போக்குவரத்தும் சுவிசரசால் துண்டிக்கப்படலாம்.

பொதுமக்கள் அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான நடவடிக்கை:

நேரில் தோற்றி கல்வி கற்கும் பாடசாலைகள், மேல்நிலை மற்றும் உயர்கல்வி நிலையங்கள், இடைநிறுத்தப்படுகின்றன. ஆனால் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களுக்கு விடுப்பு வழங்கி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. வாய்பிற்கேற்ப இணையவழியில் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. குழந்தைகள் பராமரிப்பு மாநில அரசின் பொறுப்பென நடுவன் அரசு அறிவித்திருக்கின்றது. ஆகவே சரியான முடிவுகள் மாநிலங்களால் பெரும்பாலும் 16. 03. 2020 எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னரே தீர்மானிக்கப்பட்ட உயர்தேர்வுகள் (பரீட்சைகள்) பாதுகாப்பு நடவடிக்கை கைக்கொள்ளப்பெற்று சூழல் ஏற்புடையதாயின் நடத்தப்படலாம்.

100 மக்களுக்கு மேற்பட்டு தனிப்பட்டோ பொதுவாகவோ நிகழ்வுகள் நடத்தப்படுவது தடைசெய்யப்படுகின்றது. 100 விருந்தினர்களுக்கு உட்பட்டோர் பங்கெடுக்கும் நிகழ்வுகள் சரியான உடல் நல நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு நடாத்தப்படலாம்.

நோய்வாய்ப்பட்டோர் நிகழ்வுகளில் பங்கெடுக்கக்கூடாது, அப்படி அறியப்பட்டால் அவர்கள் நிகழ்வுகளில் இருந்து வெளியேற்றப்படவேண்டும்.

நோய் தொற்றக்கூடிய ஆபத்து உள்ளவர்களை விலக்கி வைக்கப்பட வேண்டும். உரிய இடைவெளி விடப்பட்டு, பொதுவான மாசு-, நோய்த்தொற்று தவிர்க்கும் முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இவ்விதிகள் அடிப்படையில் உணவகம், இரவு விடுதி, நடனவிடுதி ஆகியன 50 விருந்தினர்களை உள்ளடிக்கி விருந்தோம்பலாம். போதியளவு இடைவெளிகள் விடப்படுவதுடன் முன்னர் குறிக்கப்பட்ட நோய்த்தொற்றுப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கைக்கொள்ளப்பட வேண்டும்.

நடுவன் அரசினால் வெளியிடப்படும் இவ் விதிகளை மக்கள் ஒழுகவைக்க மாநில் அதிகாரிகளுக்கு முழுமையான அதிகாரம் நடுவன் அரசினால் வழங்கப்படுகின்றது.

பொது இடங்களில் இதுதொடர்பாக அதிகாரிகள் எந்நேரமும் சோதனை மேற்கொள்ளலாம். அதிகாரிகள் உள்நுழைந்து ஆய்வுசெய்ய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உடல்நலப்பாதுகாப்பு தொடர்பான கட்டாய அறிவிப்பு

அனைத்து மாநிலங்களும் நடுவன் அரசினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நடுவன் அரசின் உடல்நலப்பாதுகாப்பு நடுவத்திற்கு தாம் பராமரிக்கும் நோயாளர்கள் தொகை, மற்றும் தயாராக இருக்கும் நோயாளர் படுக்கைத் தொகையினை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும்.

கொறோனா தொற்றுத் தொடர்பாக ஆயப்படும் தகவல்கள், பயன்படுத்தப்படும் படுக்கையின் தொகை என்பனவும் நடுவன் அரசிற்கு தெரிவிக்கப்படவேண்டும்

தீவிரசிகிச்சை பெறும் நோயாளர்கள் தொகை, தயாராக இருக்கும் படுக்கைகள் தொகை என்பன அறிவிக்கப்பட வேண்டும்.

கையிருப்பில் இருக்கும் நோய்க்காப்பு ஆடைகள், மாசு தவிர்க்க பயன்படும் பொருட்கள், மூச்சுநலன்பேண் முகமூடிகள், கையுறைகள், காப்பு அணிகள் மற்றும் காப்புக்கண்ணாடிகள் நடுவன் அரசிற்கு தெரியப்படுத்தப்படவேண்டும்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் பணியில் உள்ள மருத்துவ தொழிலாளர்கள் மற்றும் தாதிமார் தொகையும் தெரிவிக்கப்படவேண்டும்.

தற்போது நிலவும் பேரிடர்சூழலில் மருத்துவமனைகள் தம்மால் பொறுப்பேற்கக்கூடிய ஆகக்கூடிய நோயாளர் தொகை, தம்மால் வழங்கக்கூடிய கட்டில்தொகை, தமது முழு வலு எது என்பதனையும் நடுவன் அரசிற்கு அறிவிக்க வேண்டும்.

28.02.2020 சுவிற்சர்லாந்து நாட்டின் நடுவன் அரசால் வெளியிடப்பட்ட பேரிடர் பாதுகாப்பு விதிகள் இத்தால் விலக்கப்படுவதுடன் 13.03.2020 வெள்ளிக்கிழமை 15.30 மணிமுதல் இங்கு குறிக்கப்படும் புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றது. இதில் எல்லைப் பாதுகாப்பு விதிகள் மட்டும் 16.03.2020 காலை 06.00 மணிமுதல் நடைமுறைக்கு வருகின்றது.

பாடசாலைகள் தொடர்பாக எட்டப்பட்ட முடிவு 04. 04. 2020 வரைக்கும் செல்லுபடியாகிறது.

ஏனைய அனைத்து விதிகளும் 30. 04. 2020 வரை நடைமுறையில் இருக்கும்.

குறோனா நோய்த் தொற்றுச் சூழலிற்கேற்ப இவ்விதிகள் நடுவன் அரசினால் மேலும் கடுமையாக்கப்படலாம் அல்லது தற்போதைய சூழல் சீரடைந்து நலன் பெருகினால் தடைகள் தளர்த்தப்படலாம்.

ரிச்சீனோ மாநிலத்திற்கு அடுத்தபடியாக பிறைபூர்க் மாநிலம், சுவிஸ் நடுவன் அரசின் இம்முடிவிற்கு முன்னரே பாடசாலை மூடப்படுவதாக அறிவித்திருந்தது. ஏனைய மாநிலங்கள் நடுவன் அரசின் பரிந்துரை மற்றும் கட்டளைகளை தாம் எப்படி நடைமுறைப்படுத்த உள்ளோம் என்பதை எதிர்வரும் 16. 03. 2020 திங்கட்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடுவன் அரசின் அறிவித்திலிற்கு அடுத்து உடன்கூடிய பேர்ன் மாநில அரசு, சுவிஸ் நடுவன் அரசு முன்மொழிந்திருக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மற்றும் கட்டளைகளையும் தாம் அப்படியே மாற்றம் ஏதுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. பேர்ன் நகரசபை மாநில அரசின் மற்றும் அதுபோல் நடுவன் அரசின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தமது முழுமையான ஒத்துழைப்பு உத்தரவாதத்தினை வழங்கி உள்ளது.

தொகுப்பு: சிவமகிழி