சுமந்திரன், ஶ்ரீதரன் குறித்த முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; சி.வி.கே.சிவஞானம்

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் தீர்மானம் எடுக்கும் எனவும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்படவேண்டியவர் எம்.ஏ.சுமந்திரன் என கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக நேற்றஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில்,

“இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அவர் அந்தக் கடிதத்தினை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் எனக்குக் கிடைத்துள்ளது. அவரால் அனுப்பப்பட்ட கடிதத்தினை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. அதனை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் சமர்ப்பித்து, விடயங்களை ஆராய்ந்து அந்தக் குழுவில் இருப்பவர்கள் யார் என்பதையும் ஆராய்ந்து தீர்மானித்து முறைப்பாடு பரிசீலிக்கப்படும்.

இதேவேளை,தவராசாவின் முறைப்பாடு மட்டுமல்லாது ஏற்கனவே வேறு பல முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. சுமந்திரன், ஸ்ரீதரன் மற்றும் குணாளனுடைய முறைப்பாடுகள் என பல முறைப்பாடுகள் இருக்கின்றன. எனவே, இவ்விடயங்கள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார்.